மருத்துவ மாணவர்கள் ரூ. 15 லட்சத்தை திருப்பித் தர வேண்டும்-ராமதாஸ்
திண்டிவனம்: மருத்துவ மாணவர்கள் போராட்டம் தொடர யார் காரணம் என எனக்குத் தெரியும் என்று பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
திமுக தேர்தல் அறிக்கையில் மருத்துவத் துறை என்ற தலைப்பில், இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது உண்மையா.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் எனக் கூறுபவர்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை இதுவரை நிரப்பாதது ஏன். இதை நிரப்பக் கோரி, வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
மருத்துவ மாணவர்கள் போராட்டம் 3 மாதத்திற்கு முன்பு துவங்கியது. இந்தப் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது. முதல்வர் கருணாநிதி, மாணவர்களிடம் வாக்குறுதி அளித்த பின்னர் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்தப் போராட்டம் தொடர யார் காரணம் என எனக்குத் தெரியும். போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது மருத்துவம் படித்துவிட்டு 15,500 பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள். பாமக போராட்டத்தால், அவர்களில் சிலருக்காவது வேலை கிடைக்கும்.
இனி புதிதாக மருத்துவக் கல்லூரியில் சேரும்போதே மாணவர்களிடம், 3 வருடங்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவேன் என உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அரசு செலவு செய்த ரூ.15 லட்சத்தை திருப்பிக் கட்டுவேன் என எழுதி வாங்க வேண்டும்.
பாமக நடத்தும் போராட்டம் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பில்லாமல் நடக்கும்.
ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் போடுவது போல, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்கும் மானியம் அவர்களுக்கு போய்ச் சேரவில்லை.
இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகமாக உள்ளது. இலங்கை இறையாண்மைக்கு குந்தகம் வரக்கூடாது எனக் கூறுபவர்கள், இதற்கு எதுவும் கூறாதது, தமிழக மக்களுக்கு பெரிய அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications