வேளாண் மாணவர்களின் பிரச்சனையை தீர்க்க திருமாவளவன் கோரிக்கை
சென்னை: தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் வேளாண் மாணவர்களின் பிரச்சனையை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் கடந்த 3ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, பெரியகுளம், மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 1987ம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 14,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வனவியல் பட்டம் படித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் அரசின் வேலை வாய்ப்பு மூலம் சுமார் 600 பேர் மட்டும் நிரப்பப்பட்டுள்ளனர்.
காலியாக உள்ள வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர், வன அலுவலர் மற்றும் வேளாண் பொறியாளர் ஆகிய பணிகளை உடனே தமிழக அரசு நிரப்ப வேண்டும்.
வேளாண் துறையில் காலி பணியிடங்களை பதவி மூப்பு அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும். உழவர் சந்தைகளில் தனி வேளாண் அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டம், ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டு திட்டம், தேசிய மானாவாரி மேம்பாட்டு திட்டம், விரிவான தரிசு நில மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களில் பணிபுரியும் வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் 5 ஆண்டுகளாக பணிபுரியும் பட்டதாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் வேளாண் மாணவர்கள், வேலையில்லா வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரை அழைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications