ராமதாஸ் கருத்து ஏற்புடையதல்ல - தா.பாண்டியன்
கோயம்புத்தூர்: மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கருத்து ஏற்கும் படியாக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவ கல்லூரி மாணவர்களின் கிராமப்புற பயிற்சி காலத்தை 2 வருடமாக உயர்த்த வேண்டும். அங்கு பணிபுரிய மாணவர்களிடம் எழுதி வாங்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புக்கு பினனர் அவர்களை கிராமப்புற மருத்துவமனைகளில் அரசு நியமிக்குமானால் அதற்கு உடன்பட்டு மாணவர்கள் சேவையாற்ற தயாராகவே உள்ளனர்.
ராமதாஸ் கூட அந்த காலத்தில் மருத்துவம் படித்து விட்டு, எழுதிக் கொடுக்காமல்தான் தமிழக மக்களுக்கு இப்போதும் சேவையாற்றி வருகிறார். எனவே கிராமப்புற மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைப்பதில்லை என்ற அவரது கருத்து ஏற்க கூடியதல்ல.
முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதலில் கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு கேரள அரசை பிரதமர் வற்புறுத்தி இணங்கவைக்க வேண்டும். அதன்பின் கேரள அரசுடன் தமிழக
அரசு எத்தனை முறை வேண்டுமானாலும் பேச்சு வார்த்தை நடத்துவதில் தவறில்லை என்றார்.