முதல்வர் மீது முழு நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுகிறோம்-மருத்துவ மாணவர்கள
சென்னை: எங்கள் பிரச்சனையில் முதல்வரின் அக்கறைக்கு நன்றி தெரிவிக்கிறோம். முதல்வர் மீது முழு நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுகிறோம் என்று மருத்துவ மாணவர்கள் கூறியுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். படிப்பு காலத்தை 6.5 ஆண்டாக உயர்த்துவது, கட்டாய கிராமப்புற சேவை ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளதை கண்டித்து மருத்துவ மாணவர்கள் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த பிரச்சனை குறித்து மத்திய அரசுடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என முதல்வர் கருணாநிதி கூறியதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்த 14 கல்லூரிகளில் 10 கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிகளுக்குத் திரும்பினர்.
ஆனால் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி உட்பட 4 கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மைதிலி பாஸ்கர் மற்றும் மூத்த மருத்துவர்கள் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத் தலைவர் ராஜகணபதி மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.
அதேபோல நெல்லை, பெருந்துறை, தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களில் உண்ணாவிரதம் இருந்த மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் கல்லூரிகளுக்கு திரும்புவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மருத்துவ மாணவர் பிரதிநிதிகளிடம் கலந்து பேசிய பின்னர், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
முதல்வர் மீது நம்பிக்கை:
போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள், தங்கள் பிரச்சனையில் முழு அக்கறை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், முதல்வர் மீது முழு நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுவதாகவும் கூறியுள்ளனர்.