3 பவுன் நகைக்காக மருமகளைக் கொன்ற மாமியார் கைது
சென்னை: தாய் வீட்டிலிருந்து வரதட்சணையாக 3 பவுன் தங்க நகையை வாங்கி வராததற்காக மருமகளை தீ வைத்து எரித்துக் கொலை செய்த மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மனைவி மங்கையர்க்கரசி (23). இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது, பெண் வீட்டார், 10 பவுன் நகையும், ரூ. 10 ஆயிரம் ரொக்கமும் தருவதாக கூறினர். ஆனால் கல்யாணத்தின்போது 7 பவுன் நகை மட்டுமே அவர்கள் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மாடசாமியின் தாயார் கன்னியம்மாள் (46), மங்கையர்க்கரசியை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். திங்கள்கிழமை மங்கையர்க்கரசியை மீண்டும் அடித்து உதைத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மருமகள் மீது ஊற்றி தீவைத்தார். மங்கையர்க்கரசியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே மங்கையர்க்கரசி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நகர் காவல் நிலையத்தில் மங்கையர்க்கரசியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து கன்னியம்மாள் கைது செய்யப்பட்டார்.