26 மலேசியத் தமிழர்கள் மீண்டும் கைது - கொலை முயற்சி வழக்குப் பதிவு
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இங்கிலாந்து தூதரகம் நோக்கி ஊர்வலமாக சென்று கைதாகி பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 26 தமிழர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலாய் இனத்தவர்களுக்கு சமமாக பூர்வீக இந்தியர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகள் தரப்பட வேண்டும், தமிழர்களை 2ம் தர குடிமக்களாக நடத்தக் கூடாது என்று கோரி கடந்த மாதம் 25ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு, இங்கிலாந்து தூதரகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் 26 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு சரியாக இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில் அவர்களை மீண்டும் கைது செய்துள்ள போலீஸார், கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளனர். போராட்டத்ைதத் தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் மனோகரன் கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. கைது செய்யப்பட்ட 26 தமிழர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கை அரசு பதிவு செய்துள்ளது. இது தமிழர்களைப் பழிவாங்கும் செயலாகும்.
இனவெறி அடிப்படையில் இந்த வழக்கு நடத்தப்படுகிறது. கைது செய்யப்பட்ட 26 பேர் மீதும் முதலில் சட்டவிரோதமாக கூடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இந்த நிலையில், கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அனைவரையும் வீடு வீடாக சென்று போலீஸார் கைது செய்துள்ளனர். இது மிகவும் அநியாயமானது என்று கூறினார் மனோகரன்.
மலேசிய நாட்டுச் சட்டப்படி கொலை முயற்சி வழக்கு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்வெறிக்கும், இந்த புதிய வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசு வக்கீல் அப்துல் கனி படாயில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், சட்டப்படிதான் நாங்கள் நடந்துள்ளோம். சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்.
போராட்டம் நடத்தியவர்கள் தாக்குதல் நடத்தியதில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. செங்கல் மற்றும் இரும்புக் குழாய்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்றார்.