ஆந்திர நக்சல் தலைவர் சாகர் சென்னையில் கைது
சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நக்சலைட் தலைவரான சாகர் என்பவர் சென்னை அருகே கைது செய்யப்பட்டார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி மலைப் பகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நக்சலைட்டுகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி காயமடைந்தார். சமீபத்தில் முன்னாள் முதல்வரான ஜனார்த்தன ரெட்டியும், திருப்பதி அருகே நக்சலைட்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கினார்.
இந்தத் தாக்குதல்களில் சாகர் என்ற முக்கிய நக்சலைட் தலைவருக்குத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாகரை 10 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.
போலீஸ் விரித்த வலையில் சிக்காமல் சாகர் தப்பி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் மாவோயிஸ்ட் நக்சல்களுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தை வைத்து சாகர் சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதியான மீஞ்சூரில் இருப்பதை ஆந்திர போலீஸார் கண்டுபிடித்தனர்.
எனவே இம்முறை அவரை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து, மீஞ்சூரில் சாகர் பதுங்கியிருந்த வீட்டை ஆந்திராவிலிருந்து வந்த தனிப்படை போலீஸார் முற்றுகையிட்டனர். போலீசார் சுற்றி வளைத்தது தெரிந்தவுடன் சாகர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் சாகரை தப்ப விடாமல் துரத்திப் பிடித்தனர்.
பின்னர் சாகர் ஆந்திராவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சாகர் மீது 21 கொலை வழக்குகளும், 31 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.
கொலைச் சதித் திட்டங்களைத் தீட்டுவதில் சாகர் கில்லாடியாம். முக்கியத் தலைவர்களைக் கொல்லும் பொறுப்பை இவர்தான் மேற்கொண்டு நிறைவேற்றுவாராம்.
சில வருடங்களுக்கு முன்னர் சாகர் தலைமையில் ஸ்ரீசைலம் காவல் நிலையத்திற்குள் புகுந்து 8 போலீசாரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதே போல ஒரிசாவில் உள்ள கோராபுட் காவல் நிலையத்தில் புகுந்து துப்பாக்கிகளை அள்ளிச் சென்றனர்.
சாகர் கைது குறித்து பிரகாசம் மாவட்ட எஸ்பி நவீன்சந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாகரை மீஞ்சூரில் உள்ள வீட்டில் வைத்து பிடித்தோம். அவனை ஆந்திராவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.
நல்லமலை காட்டுக்குள் நக்சல் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தது சாகர் தான். இவன் நவீன ஆயுதங்களை கையாள்வதில் கில்லாடி. இவன் பிடிபட்டுள்ளதால் இனி எங்களால் நல்லமலை காட்டுப் பகுதியை எளிதாக எங்கள் கைவசம் கொண்டு வந்து விடுவோம் என்றார்.
இதற்கிடையே, ஆந்திர போலீஸார் சென்னைக்கு வந்து சாகரைப் பிடித்துச் சென்ற விஷயம், தமிழக போலீஸாருக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லையாம்.












Click it and Unblock the Notifications