மெக்காவுக்குள் நுழைய கட்டுப்பாடு
மெக்கா: உரிய ஹஜ் பயண அனுமதி இல்லாமல், மெக்கா நகருக்குள் நுழைபவர்களுக்கு பெருமளவு அபராதம் விதிக்கப்படும். அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவூதி அரேபிய பாஸ்போர்ட் இலாகாவின் சோதனைச் சாவடிகளுக்கான பொறுப்பு அதிகாரியான கலாபல்லா அல் துவார்கி கூறுகையில், மெக்கா நகரைச் சுற்றிலும் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைச் சாவடிகள் வழியாக மட்டுமே மெக்கா நகருக்குள் நுழைய முடியும். முறையான ஹஜ் அனுமதி உத்தரவு இல்லாமல் மெக்காவுக்குள் நுழைய முயல்வோருக்கு பெரும் அபராதம் விதிக்கப்படும். அவர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நவம்பர் 6ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
மெக்காவில் வசித்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது. மற்ற ஹஜ் யாத்ரீகர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
அதேபோல சவூதியைச் சேர்ந்த யாத்ரீகர்களும் கூட முறையான அனுமதி இல்லாமல் மெக்காவுக்குள் நுழைய முடியாது.
சட்டவிரோதமாக, யாத்ரீகர்களை மெக்காவுக்குள் அனுப்ப முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர் சவூதியைச் சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு 10 ஆயிரம் சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும். ஆட்களை அனுப்பும் நபர் சவூதியைச் சேராதவராக இருந்தால் கடும் அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்.
சோதனைச் சாவடிகள் வழியாக செல்லும் யாத்ரீகர்களின் ஆவணங்கள் அனைத்தும் தீவிரமாக பரிசீலிக்கப்படும். போலியான ஆவணங்களுடன் வருவதைத் தடுக்க நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சோதனைச் சாவடிகளில் பெண் போலீஸ் அதிகாரிகளும் பணியில் இருப்பார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications