அமெரிக்காவில் 9 பேரை சுட்டுக் கொன்று வாலிபர் தற்கொலை
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தி 9 பேரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்கவில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது சகஜமாகி விட்டது. அந்நாட்டு துப்பாக்கிக் கலாச்சாரத்தின் மோசமான நிலையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின், நெபரஸ்கா மாநிலத்தில் உள்ள ஒமாகா என்ற இடத்தில் வெஸ்ட்ரோட்ஸ் ஷாப்பிங் வளாகம் உள்ளது. இங்கு நேற்று பிற்பகலில் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நுழைந்தார்.
வணிக வளாகத்தின் 3வது மாடிக்கு சென்ற அவர் திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். வாலிபரின் இந்த திடீர் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
தனது துப்பாக்கியில் உள்ள குண்டு தீரும் வரை சுட்ட அந்த வாலிபர் பின்னர் 3வது மாடியில் உள்ள வான் மவுர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் என்ற கடைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தில் 9 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் குண்டு காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தீவிரவாதி அல்ல, உள்ளூர் வாலிபர் என்று தெரியவந்தது.
அந்த வாலிபரின் பெயர் ராபர்ட் ஹாப்கின்ஸ் எனத் தெரிய வந்தது. எதற்காக இப்படி வெறித்தனமாக நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று ஒமாகா நகருக்கு வந்து சென்ற சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
135 கடைகளை கொண்ட இந்த வணிக வளாகத்தில் வருடத்திற்கு 1.45 கோடி பேர் வருகை புரிவார்களாம். அமெரிக்காவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications