தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை

சென்னை: தமிழகத்தின் வடபகுதிகளிலிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் முக்கியச் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தொடர்ந்து அதே இடத்தில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகள், கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக சென்னை நகரிலும், வட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடிய விடிய மழை பெய்கிறது. அதேபோல காலை நேரங்களிலும் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது.
நேற்றும் காலை முதல் மதியம் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்தது. அதேபோல இரவிலும் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக சென்னை நகரில் முக்கியச் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடி வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல வேலூர், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications