குஜராத்-87 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு 11ம் தேதி நடக்கவுள்ளதையடுத்து 87 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது.
குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு 11ம் தேதியும், 2வது கட்டமாக 95 தொகுதிகளுக்கும் தேர்தல் 16ம் தேதியும் வாக்குப் பதிவு நடக்கிறது.
முதல்வர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.
காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந் நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் 87 தொகுதிகளிலும் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
போலி எண்கெளன்டர் கொலை-அவகாசம் கோரிய மோடி:
போலி எண்கெளன்டரில் சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டும், அதை நியாயப்படுத்தியும் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்க மேலும் சில மணி நேரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஆனாலும் அவர் இன்றைக்குள் பதில் அளித்தாக வேண்டும். இதனால் மாலையில் தனது விளக்கத்தை அவர் அளிப்பார் எனத் தெரிகிறது.
முன்னதாக சனிக்கிழமை காலை 11 மணி வரை அவருக்கு தேர்தல் ஆணையம் அவகாசம் தந்திருந்தது. இந் நிலையில் மேலும் சில மணி நேரம் கேட்டுள்ளார் மோடி.
சூரத் நகரில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, சொராபுதீனை சுட்டுக் கொன்றதில் எந்தத் தப்பும் இல்லை. இதற்காக என்னை சோனியா காந்தி தூக்கில் போடப் போகிறாரா.. முடிந்தால் செய்யட்டும் என்றார்.
அப்பாவியான சொராபுதீனை சுட்டுக் கொன்ற குஜராத் போலீஸார் அவரது மனைவியை கற்பழித்து எரித்துக் கொன்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசுக்காக வாதாடி வந்த மூத்த வழக்கறிஞரான துள்சி, இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டதோடு மோடியையும் மிகக் கடுமையாக தாக்கியதும் நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications