கோரிக்கையை அரசு ஏற்றதால் வேளாண் மாணவர்கள் போராட்டம் வாபஸ்
மதுரை: வேளாண் மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றதால் மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் தொடர் உண்ணாவிரதம் இருந்த வேளாண் மாணவர்கள் இன்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
வேளாண்மைத் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள், வனக் கல்லூரி, தோட்டக் கலைக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவியர் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவ, மாணவியருக்கும், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவ, மாணவியர் இறங்கியுள்ளனர். இதையடுத்து கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டன.
தொடர்ந்து 6 நாட்களாக நடந்து வந்த இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று மதுரை மற்றும் கோவையில் மட்டும் 19 மாணவிகள் உட்பட 25 பேர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து பல மாணவிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு, வேளாண் மாணவர்களின் 11 கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்று கொள்வதாகவும், அதனால் மாணவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இதனால் அரசின் கோரிக்கையை ஏற்ற மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததுடன், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications