பெண் நக்சலைட் மேரி பிடிபட்டது எப்படி?
சென்னை: ஆந்திர பெண் நக்சலைட் மேரி என்கிற மாதவி பிடிபட்டது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர போலீஸாரின் தீவிர வேட்டையில் இடம் பெற்றிருந்தவர் பாண்டுரங்க ராவ். மிகப் பெரிய நக்சலைட் இவர். இவர் மீது ஆந்திராவில் 21 கொலை மற்றும் 31 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் பரிசு தருவதாகவும் ஆந்திர அரசு அறிவித்திருந்தது.
பாண்டு - மேரி காதல் கதை
பாண்டுரங்க ராவ், காட்டுக்குள் தலைமறைவாக இருந்த போது இவருக்கும் மேரி என்ற மாதவி என்ற பெண் பெண் நக்சலைட்டுக்கும் காதல் மலர்ந்தது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் மாதவி கர்ப்பமாகினார். ஆனால் கர்ப்பமானவுடன் அதைக் கலைத்து விடுவாராம் மேரி. இப்படி அடிக்கடி செய்ததால், அவருக்கு வயிற்றில் புண் ஏற்பட்டுள்ளது.
இதற்காக சிகிச்சை பெற ஆந்திர மருத்துவமனைகளுக்குச் சென்றால் போலீஸில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால், பாண்டுரங்கராவ், மேரியை சென்னைக்கு அழைத்து வந்தார்.
அங்கு தனது நண்பர் ஒருவர் துணையுடன் மீஞ்சூர் அருகேயுள்ள புங்கமேடு என்ற கிராமத்தில் உள்ள லட்சுமி என்பவரின் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் வாடைக்கு குடிவந்தனர்.
போலீஸ் பிடியிலிருந்து தப்பினார்
கடந்த வாரம் மாதவியுடன் பாண்டுரங்க ராவ் ஆந்திரா சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது புதன்கிழமை (5ம் தேதி) அதிகாலை ஆந்திர மாநில போலீசார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது பாண்டுரங்கராவை போலீசார் பிடித்தனர். ஆனால் அவருடைய மனைவி மாதவி வேறொரு சீட்டில் இருந்ததால் போலீசாரால் அடையாளம் காண இயலவில்லை. இதனால் அவர் போலீஸில் சிக்காமல் தப்பினார்.
போலீஸ் பிடியில் இருந்து தப்பிய அவர் சென்னை வந்து சேர்ந்தார். பின்னர் புங்கமேடுக்கு வந்ததும் அப்பகுதி கவுன்சிலர் துரையிடம் சென்று தன் கணவரை மர்ம மனிதர்கள் கடத்திச் சென்று விட்டதாக கூறினார். உடனே அவர் மாதவியை மீஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து புகார் செய்தார். போலீசாரிடமும் மாதவி தன் கணவனை யாரோ சிலர் கடத்திச் சென்று விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
குட்டு உடைந்தது
இதற்கிடையில் ஆந்திரா கொண்டு செல்லப்பட்ட பாண்டுவிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் மேரி குறித்த விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து ஆந்திர போலீஸ் படை புங்கமேட்டுக்கு விரைந்தது. பெரிய போலீஸ் பட்டாளமே அந்த கிராமத்தை முற்றுகையிட்டது. கிராமம் முழுவதையும் வளைத்த போலீஸார் வீடு வீடாக சோதனை போட்டனர். இதில் மேரி சிக்கிக் கொண்டார்.
அதன் பின்னரே மேரி ஒரு நக்சலைட் என்ற விவரம் புங்கமேட்டு மக்களுக்குத் தெரிய வந்து அதிர்ந்தனர். இத்தனை நாட்களாக ஒரு நக்சலைட்டுடனா சகவாசம் வைத்திருந்தோம் என்று பெண்கள் அதிர்ந்து
போய் விட்டனர்.
யாருக்குமே எந்த சந்ேதகமும் வராத அளவுக்கு படு இயல்பாக, பழகி வந்துள்ளார் மேரி. இதனால் அவர் கைது செய்யப்பட்டபோது புங்கமேடு கிராம மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டனர்.
இது தொடர்பாக புங்கமேடு கவுன்சிலர் துரை கூறுகையில், இந்த பகுதி மக்கள் பொதுவாக வெளியூர் ஆட்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுக்க மாட்டார்கள். சிகிச்சை என்று வந்ததால் வீடு கொடுத்து விட்டனர். அதுவே வினை ஆகிவிட்டது. மாதவியை பிடிக்க வந்த பெரிய போலீஸ் படையை பார்த்து கிராமத்து மக்கள் மிரண்டு விட்டனர். இவ்வளவு பெரிய போலீஸ் படை இதற்கு முன்பு எங்கள் ஊருக்கு வந்தது கிடையாது என்றார்.
புங்கமேடு கிராமத்தை சேர்ந்த வீரன் கூறுகையில், இந்த பகுதியில் லட்சுமிக்கு மட்டும்தான் தெலுங்கில் சரளமாக பேச வரும். எனவே புதிதாக வந்த பாண்டுரங்கராவ்-மாதவி தம்பதியினர் தெலுங்கில் பேசி அவரை மயக்கிவிட்டனர். லட்சுமியின் மகளுக்கும், மருமகனுக்கும் வீட்டை வாடகைக்கு விட விருப்பம் இல்லை. ஆனால் லட்சுமி தான் வீட்டை கொடுத்து விட்டார் என்றார்.
கண்மணி என்ற பெண் கூறுகையில், மாதவி நடவடிக்கைகளில் எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. அந்த அளவுக்கு இயல்பாக இருந்தனர். அவர்கள் ஆந்திரா நக்சலைட்டுகள் என்று தெரிந்த போது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது என்றார்.