கடத்தப்பட்ட 5 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட 5 பாம்பன் மீனவர்களும் நேற்று இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாம்பன் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள், டிசம்பர் 1ம் தேதி திசை மாறிச் சென்று தலைமன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றிச் சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களின் மீன்பிடி வலைகள், மீன்களை கடலில் தூக்கிப் போட்டனர். அதன் பிறகு 5 மீனவர்களையும், அவர்கள் இருந்த படகையும் கொண்டு சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட ஐந்து மீனவர்களையும் மீட்க தமிழக மீன்வளத்துறை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை, இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது.
அவர்களை நடுக் கடலில் வைத்து இந்திய கடலோரக் காவல் படை பெற்றுக் கொண்டது. பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து நான்கு படகுகளில் வந்த 21 மீனவர்களும், தங்களது பகுதி மீனவர்களை அழைத்துக் கொண்டு பாம்பன் புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகையும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications