வேண்டுமன்றே குற்றம் சாட்டும் ராமதாஸ்- அமைச்சர் எம்.ஆர்.கே
கன்னியாகுமரி: தமிழக அரசு மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டும் என்றே குற்றம் சாட்டுகிறார், இது சரியல்ல என்று மாநில நல்வாழ்வுத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
நடப்பு ஆண்டு மருத்துவத் துறை மேம்பாட்டு பணிக்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு விழுப்புரம், தர்மபுரி, திருவாரூர் ஆகிய 3 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 6ம் தேதி வரை 4,491 வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 48 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். அடுத்த 24 மாதங்களில் 9,000 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு மருத்துவ முகாமுக்கும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை செலவு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு 2.5 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.119 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,447 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 45 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 230 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,775 புதிய மருத்துவர்களும், 1,000 கிராம செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் பாமக நிறுவனர் டாக்டர் அரசு மீது வேண்டும் என்றே குற்றம் சாட்டுகிறார். இது சரியல்ல என்றார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications