சொராபுதீன் கொலையை நான் நியாயப்படுத்தவில்லை: மோடி

அகமதாபாத்: சொராபுதீன் ஷேக் கொலையை நான் நியாயப்படுத்தி ஒருபோதும் பேசியதில்லை. என்னை மரண வியாபாரி என்று விமர்சித்த சோனியா காந்திக்குப் பதிலளிக்கும் வகையிலேயே நான் பேசினேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் மரண வியாபாரி என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதையடுத்து மாங்ரோல் என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தின்போது பேசிய மோடி, சொராபுதீன் ஷேக்கை போலி என்கவுண்டரில் கொன்றது நியாயமானதுதான் என்று பேசினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் அனுப்பின. பதிலுக்கு சோனியா காந்தியின் பேச்சு குறித்து பாஜக சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
மோடி மீதான புகாரைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியது. மோடியும் தனது தரப்பு விளக்கத்தை அனுப்பியுள்ளார்.
அதில், என் மீதான புகார்களுக்கு காரணம், நான் பேசிய பேச்சை பத்திரிக்கைகள் சரியான முறையில் வெளியிடாததுதான் காரணம். நான் ஒருபோதும் போலி என்கவுண்டரை நியாயப்படுத்தி பேசவில்லை. எந்த இடத்திலும் நான் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டது சரியானதுதான் என்று கூறியதில்லை.
நான் உண்மையில் பேசியது என்னவென்றால் எந்த ரூபத்திலும் குஜராத்துக்குள் தீவிரவாதத்தை நுழைய விட மாட்டோம். குஜராத் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. காங்கிரஸ் கட்சி தீவிரவாதம், தீவிரவாதிகள் விஷயத்தில் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. எனவே மரணத்தின் வியாபாரிகள் உண்மையில் யார் என்றுதான் நான் பேசினேன்.
நாடாளுமன்றத்தைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் காப்பது காங்கிரஸ் அரசுதான் என்று தான் எனது பிரசாரத்தின்போது கூறினேன்.
சொராபுதீன் குறித்து நான் கூறுகையில், அந்த வழக்கு குறித்தும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் மட்டுமே பேசினேன். வழக்குக்கு முரண்பாடாக எதையும் நான் பேசவில்லை.
காங்கிரஸ் கட்சி ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. தீவிரவாதத்திற்கு ஆதரவாக நடந்து கொள்கிறது. நானும், எனது கட்சியும் இதுதொடர்பாக தொடர்ந்து புகார் கூறி வருகிறோம்.
ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக குஜராத் அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக ஒரே ஒரு உயிர்தான் போயுள்ளது. அந்த அளவுக்கு தீவிரவாதத்தை நாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.
எனவே எனது பிரசாரப் பேச்சின்போது எந்தவிதமான விதிமீறலிலும் நான் ஈடுபடவில்லை. எதையும் தவறாகப் பேசவில்லை. எனவே என் மீதான புகாரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.
காங்கிரஸுக்கும் நோட்டீஸ்:
இதற்கிடையே, பாஜக கொடுத்த புகாரின் பேரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேச்சு குறித்து விரிவான அறிக்கை தருமாறு குஜராத் மாநில தேர்தல் அதிகாரியை, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications