For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனைக் கொல்ல உத்தரவிடப்படவில்லை: ஜி.பார்த்தசாரதி மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

Parthasarathy
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கொல்ல தனக்கு முன்னாள் தூதர் ஜே.என்.தீக்சித் உத்தரவிட்டதாக முன்னாள் இந்திய அமைதி காக்கும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் கூறியுள்ளது முற்றிலும் தவறான தகவல் என்று முன்னாள் தூதர் ஜி.பார்த்தசாரதி கூறியுள்ளார்.

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா என்ற நூலை எழுதியுள்ளார்.

இதில், 1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, அப்போதைய இலங்கைத் தூதர் ஜே.என்.தீக்சித், தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரபாகரனைக் கொன்று விடுமாறு உத்தரவிட்டார். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இதற்கு உள்ளது என்று அவர் கூறியதாகவும், ஆனால் அதை தான் நிறைவேற்ற மறுத்து விட்டதாகவும் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார்.

ஹர்கிரத் சிங்கின் இந்த நூல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது நூலில் கூறப்பட்டுள்ளது குறித்து ஹர்கிரத் சிங் கூறுகையில், நான் பிரபாகரனைக் கொல்ல முடியாது என்று தீக்சித்திடம் கூறியபோது அதற்கு அவர், இதுதொடர்பான உத்தரவை ராஜீவ் காந்திதான் எனக்குக் கொடுத்துள்ளார். அதை ராணுவம் நிறைவேற்ற வேண்டும். இதை நீங்கள் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உண்மையில் ராஜீவ் காந்தி சொல்லித்தான் தீக்சித் அவ்வாறு கூறினாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதை என்னால் சோதனை செய்து பார்க்கவும் முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு மேலிருந்துதான் அதுதொடர்பான உத்தரவு வந்திருக்கும் என்று நான் தீர்மானமாக கருதுகிறேன் என்று கூறியிருந்தார் ஹர்கிரத் சிங்.

ராஜீவ் காந்தி மற்றும் தீக்சித் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு ஹர்கிரத் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதை முன்னாள் தூதர் ஜி.பார்த்தசாரதி மறுத்துள்ளார்.

இதுகுறித்து பார்த்தசாரதி கூறுகையில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான விவாகரங்களை நான்தான் கவனித்தேன்.

இந்திய அமைதி காக்கும் படை கமாண்டர்களை சந்திப்பதற்காக நான் பலமுறை யாழ்ப்பாணம் சென்றிருக்கிறேன். அந்த சமயத்தில், நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஹர்கிரத் சிங் தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அப்போது எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹர்கிரத் சிங் கூறியுள்ள புகாரில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற உத்தரவுகளை தூதர்கள் மூலம் யாரும் பிறப்பிக்க மாட்டார்கள். இதை ராணுவ அதிகாரிகளும் என்னிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹர்கிரத் சிங் புகார் கூறியுள்ள நேரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அவர் சொல்வதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் பார்த்தசாரதி.

அதேபோல முன்னாள் தென் பிராந்திய ராணுவத் தளபதியும், அமைதி காக்கும் படையின் ஒட்டுமொத்த கமாண்டராகப் பணியாற்றியவருமான தீபிந்தர் சிங்கும், ஹர்கிரத் சிங்கின் புகாரை மறுத்துள்ளார். ஒரு வேளை இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்குமானால், முதலில் என்னிடம்தான் அது சொல்லப்பட்டிருக்கும். என்னைத் தாண்டி எனக்குக் கீழ் உள்ள அதிகாரியிடம் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X