சோனியா, திக்விஜய், மல்ஹோத்ராவுக்கு நோட்டீஸ்
டெல்லி: குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதேபோல, லோக்சபா பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ராவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்துக்கள் மீது சோனியா காந்தி துவேஷமாக உள்ளார் என்று பேசியதற்காக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், டிசம்பர் 1ம் தேதி சிக்லி மாவட்டம், ஜமன்பாதா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நீங்கள் பேசுகையில், இந்த ஆட்சியில் யாரும் பாதுகாப்பாக இல்லை. குற்றவாளிகள் மட்டும்தான் பாதுகாப்பாக உள்ளனர். எண்ணற்ற எனது சகோதர, சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் அரசை இப்போது நடத்திக் கொண்டிருப்பது பொய்யர்களும், துரோகிகளும், மரணத்தின் வியாபாரிகளும்தான் என்று பேசியிருப்பதாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக டிசம்பர் 2ம் தேதியும், 7ம் தேதியும் இரு புகார்களை குஜராத் பாஜக பொதுச் செயலாளர் ஜெயந்திலால் பரோட் சமர்ப்பித்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் நகல்களையும், நீங்கள் பேசிய பேச்சு இடம் பெற்ற சிடியையும் இணைத்துள்ளோம். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல திக்விஜய் சிங்குக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.