வரும் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி!
டெல்லி&அமகதாபாத்: குஜராத்தில் நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்த மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கான பாஜக வேட்பாளராக அத்வானி இன்று அறிவிக்கப்படவுள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குஜராத் மாநில சட்டசபைக்கு உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 87 தொகுதிகளும் செளராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ளது.
மொத்தம் 1.79 கோடி வாக்காளர்கள் நாளைய தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 669 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதமுள்ள 92 தொகுதிகளுக்கும் 16ம் தேதி 2ம் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
நாளை வாக்குப் பதிவு நடைபெறும் 87 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 82 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 5 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.
குஜராத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி 78 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மொத்தம் 53 பெண்கள் தேர்தல் களத்தில் நிற்கின்றனர்.
செளராஷ்டிரா பகுதியில்தான் பெரும்பாலான தொகுதிகள் (52) உள்ளன. கட்சி பகுதியில் 6 தொகுதிகளும், தெற்கு குஜராத்தில் 29 தொகுதிகளும் உள்ளன.
வாக்குப் பதிவுக்காக 19 ஆயிரத்து 924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4834 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. 1306 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
தேர்தலையொட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 52 ஆயிரம் பாரா மிலிட்டரி படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வினோத் பப்பார் கூறியுள்ளார்.
வேட்பாளர் அத்வானி:
இந் நிலையில் அடுத்த மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கான பாஜக வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்படவுள்ளார்.
இதற்கான அறிவுப்பு இன்றிரவு வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்வானியை பிரதமர் பதவிக்கு நிறுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒப்புக் கொண்டுவிட்டதாக தெரிகிறது.