For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்கள் வாழ்க்கை பிரச்சனையில் கைவைப்பது நல்லதல்ல: பாஜக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசு அடிக்கடி பாடத்திட்டங்களை மாற்றுவதன் மூலம் ஒரு நெறிமுறையையும் கையாளவில்லை என்று மாநில பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கை வைக்கும் முதல் துறை கல்வித்துறை. அரசுத் துறைகள் அரசும், மக்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக இயங்குகிறது.

ஆனால் கல்வித்துறை மட்டும் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறது. போட்டி நிறைந்த உலகில் மாணவர்களது கல்வித்தரம் உலகளவில் தரத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

மாணவர்களது பாடத்திட்டம் அதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது. பொதுவாக கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலச் சூழ்நிலைக்கேற்ப பாடத்திட்டங்கள் திருத்தம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போதைய அரசு பாடத்திட்ட மாற்றத்தில் எந்த ஒரு நெறிமுறையும் கையாண்டதாக தெரியவில்லை.

ஒரு கல்வியாண்டில் இதுதான் பாடத்திட்டம் என்று ஒவ்வொரு வகுப்பிற்கும் முடிவு செய்யப்பட்டு புத்தகங்களும் அச்சடிக்கப்படுகின்றன. இவ்வாறு புத்தகங்கள் அச்சடித்து வகுப்பறைகளுக்கு வந்து சேர்ந்த பின்னர் அதில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது அரசின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.

3 ஆண்டுக்கு ஒரு முறை சீரான பாடத்திட்டம் என்பது மாறி, ஆண்டுக்கு ஒருமுறை என்றாகி, அதுவும் மாறி இப்போது அரசு நினைத்தபோதெல்லாம் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்வது தவறானதாகும்.

இந்த கல்வியாண்டில் அச்சடிக்கப்பட்ட பின்னர் 10,11,12 ஆகியவகுப்புகளுக்கு பல்வேறு பாடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் சில பகுதிகள் நீக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.

ஆனால் அடுத்த நாளே அதை வாபஸ் பெற்றுக் கொண்டது. தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நீக்கப்பட்ட பகுதிகளை திரும்ப சேர்த்துக் கொண்டதாக அரசு அறிவிக்கிறது. ஆனால் பாடத்திட்டத்தில் தங்களது கொள்கையை பரப்பும் விஷயங்கள் இருந்தது தான திரும்ப பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்பது தான் உண்மை.

நினைத்த போதெல்லாம் பாடத்திட்ட பகுதிகள் மாற்றப்படுவதால் எதை படிக்க வேண்டும் என மாணவர்களும், இப்பாட பகுதிகளை பயிற்றுவிப்பதா, வேண்டாமா என ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

அரசு விரும்பும் போதெல்லாம் அமைச்சரவையும், அமைச்சர்களது இலாக்காக்களையும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் கல்வி திட்டத்தை மாற்றுவது நல்லதல்ல. மாணவர்களது வாழ்க்கை பிரச்சனையில் கைவைப்பது நல்லதல்ல என இல.கணேசன் கூறியுள்ளார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X