ஜெ. மீதான வருமானவரி வழக்கை தொடர்ந்து நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதா கடந்த 1993-94ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வருமானவரித் துறையின் செட்டில்மென்ட் கமிஷன் கடந்த 1998ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி இதுவரை வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் அபராதத்துடன் வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி ஜெயலலிதா ரூ.1 கோடியே 72 லட்சத்துக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்து அதற்கான வரியை அபராதத்துடன் செலுத்தினார். இதனை கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று வருமானவரி செட்டில்மென்ட் கமிஷன் ஏற்றுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா மீது பல வழக்குகள் உள்ள நிலையில் செட்டில்மென்ட் கமிஷன் மூலம் கணக்கை முடித்து வைத்தது தவறு. செட்டில்மென்ட் கமிஷனுக்கு இந்த அதிகாரம் இல்லை. எனவே ஜெயலலிதாவின் கணக்கை ஏற்றது தவறு. அதனால் செட்டில்மென்ட் கமிஷனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வருமானவரித்துறை அந்த மனுவில் கூறியிருந்தது.
இன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், செட்டில்மென்ட் கமிஷன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கணக்கை தீர்த்து வைத்தது தவறாகும். எனவே ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்குகளை தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பளித்தனர்.