வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டருக்கு 4 மாதம் சிறை
கரூர்: கரூரில் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
கரூரில் கடந்த 32 வருடங்களாக வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் திலகர். இவர் தன்னிடம் வழக்கு சம்பந்தமாக வந்த ஒருவருக்காக கடந்த மார்ச் 20ம் தேதியன்று அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது வழக்கறிஞர் திலகருக்கும், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இதில் வழக்கறிஞர் திலகரை இன்ஸ்பெக்டர் குமாரவேல் ஆபாச வார்த்தைகளால் திட்டிய தோடு கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் படு காயம் அடைந்த வழ்கறிஞர் திலகர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் குமாரவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை காவல் துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
இதனால் இச்சம்பவம் குறித்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சின்னு முன்னிலையில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் குமாரவேலு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கிறேன் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
தமிழக காவல் துறை தமிழக முதல்வர் கையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக காவல் துறையில் உள்ள ஒரு அதிகாரிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications