For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி- ஸ்டார் எக்சிட் போல்

By Staff
Google Oneindia Tamil News


டெல்லி: குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநில சட்டசபையில் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 அமைதியாக நடந்து முடிந்தது.

மொத்தம் 1.79 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
களத்தில் 669 வேட்பாளர்கள் உள்ளனர்.

வாக்குப் பதிவையொட்டி அனைத்துத் தொகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகளில் பெரும்பாலும் மத்திய அரசு ஊழியர்களே பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

வாக்குப் பதிவுக்காக 19,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,834 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

1,306 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டானவை என அடையாளம் காணப்பட்டு அங்கு ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 52,000 பாரா மிலிட்டரி படையினர் நிறுத்தப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது.

கட்ச் பகுதியில் வாக்குப் பதிவு மிக மிக மந்தமாக இருந்து. செளராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் காலையில் மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பிற்பகலில் தான் சூடு பிடித்தது.

40 சதவீத வாக்குப் பதிவு:

இன்று நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் செளராஷ்டிரா, தெற்கு குஜராத் பகுதிகளில் 35 முதல் 40 சதவீத வாக்குகள் பதிவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

செளராஷ்டிரா - கட்ச் பகுதிகளில் 58 தொகுதிகள் உள்ளன. தெற்கு குஜராத்தில் 29 தொகுதிகள் உள்ளன.

வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் ஸ்டார் நியூஸ் டிவி நிறுவனம் கருத்தை அறிந்து எக்சிட் போல் முடிவை அறிவித்துள்ளது.

இதில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வாக்குப் பதிவின் அடிப்படையில் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜகவுக்கு 115 சீட்கள் கிடைக்கும் என அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறை கிடைத்ததை விட 12 இடங்கள் குறைவாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு 64 இடங்கள் கிடைக்கும். இது கடந்த முறையை விட 13 சீட்கள் கூடுதலாகும். சுயேச்சைகள், பிற கட்சிகளுக்கு 3 சீட்கள் கிடைக்கும் என ஸ்டார் நியூஸ் எக்சிட் போல் கூறுகிறது.

இன்று தேர்தல் நடந்த 87 தொகுதிகளில் பாஜகவுக்கு 48 இடங்களும், காங்கிரஸுக்கு 37 இடங்களும் கிடைக்கும். சுயேச்சைகள், பிற கட்சிகளுக்கு 2 சீட்கள் கிடைக்கும் எனவும் அது தெரிவிக்கிறது.

இன்று நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவு பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் இல்லாமல் முடிந்தது.

ராஜ்கோட்டில் பாஜக தொண்டர் ஒருவர் இன்று காலை கத்தியால் குத்தப்பட்டார். போர்சாத் நகரில் 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.

ஓட்டு போடாத கேஷுபாய்:

முதல்வர் நரேந்திர மோடியின் தீவிர எதிர்ப்பாளரும், முன்னாள் முதல்வருமான கேஷுபாய் படேல் இன்றைய தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தார்.

பாஜக வேட்பாளர் இஷ்வர்சிங் படேல், தான் போட்டியிடும் அங்கலேஷ்வர் தொகுதியில் ஓட்டுப் போட சென்றபோது வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வந்ததற்காக ஓட்டுப் போட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இல்லை. பொதுவாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு இருந்ததாக மாநில தேர்தல் அதிகாரி வினோத் பப்பார் கூறினார்.

மீதமுள்ள 95 தொகுதிகளுக்கும் வரும் 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X