தமிழகத்தில் மின்துறை செயலிழந்து விட்டது - ராமதாஸ்
கடலூர்: மாநிலத்தில் தொழில் வளர்ச்சி தேவை தான். ஆனால் விவசாயத்தை அழித்துவிட்டு தொழில் வளர்ச்சி தேவையில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தியாகவள்ளி பகுதியில் அமைக்கப்படும் கடலூர் பவர் கார்ப்பரேஷன் என்கிற தனியார் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ராமதாஸ் பேசுகையில், பொதுநல நோக்கத்தில் அரசு செயல்படுத்தும் திட்டங்களை வரவேற்கிறேன். ஆனால் ஒரு தனியார் நிறுவனத்திற்காக பல கிராமங்களை கையகப்படுத்தி ஒரு திட்டம் கொண்டுவந்தால் அதை பொதுநல நோக்கம் கொண்டதாக கருத முடியாது.
அனல்மின் நிலையம் அமைக்க 200 முதல் 300 ஏக்கர் நிலம் போதும். நெய்வேலி, எண்ணூர், மேட்டூர் அனல்மின் நிலையங்கள் அந்தளவு இடத்தில் தான் செயல்படுகின்றன. இங்கே மட்டும் 1,300 ஏக்கர் எடுப்பது ஏன்?
விளைநிலங்களை அழித்துவிட்டு, புதிய தொழிற்சாலை அமைக்க மாட்டோம் என்று சட்டசபையில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். அந்த உறுதிமொழியை பின்பற்றுங்கள் என்று தான் கேட்கிறோம்.
சென்னை அருகே 140 கிராமங்களை அழித்துவிட்டு புதிய பொருளாதார மண்டலம் அமைக்க நினைத்தார்கள். அதை எதிர்த்து போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. இல்லையென்றால் இங்கேயும் நந்திகிராம் சம்பவம் நடந்திருக்கும்.
இந்தியாவில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் 45.6 சதவீதம். ஆனால் தமிழகத்தில் 100ல் 23 பேர் தான் சொந்தமாக நிலம் வைத்துள்ளனர். இந்த அதிர்ச்சியான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்திய பின்னர் உள்ள லட்சணம் இதுதான்.
தொழில் வளர்ச்சி தேவைதான். ஆனால் விவசாயத்தை அழித்துவிட்டு தொழில் வளர்ச்சி தேவையில்லை.
பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்தடை அமலில் இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டோம். இனி மின் தட்டுப்பாடு வராது என்று கூறினார்கள். இங்குள்ள அனல், புனல் மின் நிலையங்கள்
சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு எப்படி இந்த மின்வெட்டு.
மின்சாரத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். பயன்பாடு அதிகமாகும்போது உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் பற்றாக்குறை வரத்தான் செய்யும். இதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன். இந்த நிலைக்கு காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன் என்றார் ராமதாஸ












Click it and Unblock the Notifications