தேனி வருசநாடு வனப்பகுதியில் பெண் உள்பட 3 நக்சல்கள் சிக்கினர்
தேனி: தேனி மாவட்டம் சிறைப்பாறை கிராமத்தில் ஒரு பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் பிடிபட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம், முருகமலை வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. கூடுதல் டிஜிபி விஜயக்குமாரும் இதற்காக சிறப்புப் பணியில் நியமிக்கப்பட்டு அவரது நேரடி மேற்பார்வையில் தேடுதல் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் நக்சலைட் நடமாட்டம் இல்லை என்றும் நக்சலைட்டுகள் ஊடுறுவாமல் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விஜயக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மயிலாடும்பாறை வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் பச்சை நிற சீருடையுடன் ஐந்து பேர் கொண்ட குழு நடமாடுவதாகவும், அவர்கள் கிராமத்து மக்களை ஆயுதப் போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக இந்தக் குழுவினர் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்துள்ளனர். பள்ளி மாணவர்களிடம் இந்த துண்டுப் பிரசுரங்களை அவர்கள் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறைப்பாறை என்ற கிராமத்திற்கு போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
3 நக்சலைட்டுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து மயிலாடும்பாறை வனப்பகுதி கிராமங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
அப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications