மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்று கணவன் தற்கொலை
சென்னை: மனைவியை சுத்தியலால் அடித்துக் கொடூரமாக கொலை செய்த கணவர் பின்னர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வினாயகம் (25). இவரும், இவரது மனைவியும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் மனைவியின் நடத்தை மீது வினாயகத்திற்கு சந்தேகம் வந்தது. இதுதொடர்பாக சமீப காலமாக மனைவியுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வினாயகத்திற்கும், அவரது மனைவிக்கும் வழக்கம் போல சண்டை வந்தது. அப்போது மனைவியை அடித்து விட்டார் வினாயகம்.
சண்டை முடிந்த பின்னர் வினாயகத்தின் மனைவி அழுதபடியே தூங்கி விட்டார். இந்த சமயத்தில், திடீரென கோபம் கொண்ட வினாயகம், வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் சரமாரியாக அடித்தார்.
அதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த வினாயகத்தின் மனைவி அங்கேயே பலியானார்.
மனைவியைக் கொன்ற பின்னர் அவரது உடலை ஒரு துணியால் மூடிய வினாயகம் ஒரு மாலையையும் உடல் மீது வைத்தார். பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு கடிதம் எழுதி உடல் மீது வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
நேராக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்த அவர் அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலைதான் இந்த கொலையும், தற்கொலை குறித்த விவரமும் தெரிய வந்தது. போலீஸார் வினாயகத்தின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications