ஜெ சொல்வது பொய்-திருமாவளவன்
சென்னை: தனது கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் தான் முதல்வரை சந்தித்து வன்னியரசுவை விடுவித்ததாக ஜெயலலிதா கூறியிருப்பது பொய் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொது செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏதுமில்லை என்று தென்மண்டல கடற்படைத் தளபதி நோபில் தம்புராஜ் நேற்று சென்னையில் கூறியுள்ளார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திமுக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு விடுதலைப் புலிகாளால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட போகிறது. அதற்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் படைத் தளபதி நோபிள் தம்புராஜ் சொல்வது உண்மையா அல்லது ஜெயலலிதா சொல்வதை நம்புவதா என்பது கேள்விகுறியாக உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலை சிறுத்தைகளையும் இணைத்து ஆதாரமில்லாத அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார்.
எங்கள் இயக்க பொறுப்பாளர் வன்னியரசுவோ அல்லது எங்கள் இயக்கமோ அப்படி ஒரு எந்த செயலிலும் ஈடுபடவில்லை. எங்கள் மீது திணிக்கப்படும் பழிகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொள்வோம். சட்டப்படியாக சதிகளை முறியடிப்போம்.
வன்னியரசு கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் நான் முதல்வரை சந்தித்து வன்னியரசுவை விடுவித்ததாக கூறியிருக்கிறார் ஜெயலலிதா. இது அப்பட்டமான பொய். நான் அன்றைய தினம் முதல்வரை சந்திக்கவேயில்லை.
சில நாட்கள் கழித்து வேறு காரணங்களுக்காக சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தேன். எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருந்தால் வன்னியரசுவை கைது செய்யாமலே விட்டு இருக்கலாமே கருணாநிதி.
காவல்துறை அரசின் குறுக்கீடுகள் இல்லாமல் இயங்குகிறது என்பதற்கு வன்னியரசுவின் கைது ஒரு சான்றாகும். ஆதாரமில்லாமல் பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அதன் காரணமாக வன்னியரசு வெளியே வந்தார் என்பதே உண்மை.
விடுதலைப் புலிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராகவோ, தமிழகத்துக்கு எதிராகவோ செயல்பட மாட்டார்கள். விடுதலை சிறுத்தைகள் இயக்கமோ அல்லது எங்கள் இயக்க பொறுப்பாளர் வன்னியரசுவோ செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படவோ பழி சுமக்கவோ நேர்ந்தால் அதை அச்சமின்றி எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என திருமா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.