ஊழியர்கள் மன அழுத்தம்: பிபிஓக்கள் புதிய உத்தி
டெல்லி: கடுமையான வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து தங்களது ஊழியர்களை வெளிக்கொணர்ந்து அவர்களை ரிலாக்ஸ் ஆக்க பல்வேறு உத்திகளை பிபிஓ நிறுவனங்கள் கையாள ஆரம்பித்துள்ளன.
இது கம்ப்யூட்டர் காலம். கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் அலுவலகங்களிலேயே நீண்ட நேரம் தங்க நேரிடுகிறது. சுருங்கச் சொல்வதாக இருந்தால் விரிவுபடுத்தப்பட்ட வீடுகளாக அலுவலகங்கள் மாறி விட்டன.
வேலைப்பளு அதிகம் இருப்பதன் காரணமாக ஊழியர்களுக்கு மன அழுத்தம், பதட்டம், சோர்வு, சரியாக சாப்பிடாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதிலிருந்து தங்களது ஊழியர்களை வெளிக் கொண்டு வரவும், அவர்களின் உடல் நலம், மன நலத்தை பேணிக் காக்கவும் பிபிஓ நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன.
உடற் பயிறசிக் கூடங்கள், பொழுதுபோக்கு கிளப்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றில் தங்களது ஊழியர்களின் கவனத்தை அவை திருப்பி விடுகின்றன. அலுவலக வளாகங்களிலேயே இவை அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த விகஸ்டமர்ஸ் நிறுவன இயக்குநர் நவீன் ஜோஷ்வா கூறுகையில், எங்களது நிறுவன வளாகத்தில் வாரம் முழுவதும் இயங்கக் கூடிய ஊழியர்கள் கிளப் உள்ளது. இங்கு டேபிள் டென்னிஸ், செஸ், கேரம், கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள், இன்டர்நெட் பார்லர்கள் உள்ளிட்டவை உள்ளன. தங்களது ஓய்வு நேரத்ைத ஊழியர்கள் இங்கு செலவிடலாம்.
இதுதவிர வெளிப்புற விளையாட்டுக்களான பேட்மிண்டன், கூடைப் பந்து போன்றவற்றுக்கும் வசதி செய்துள்ளோம். மேலும் வார இறுதி நாட்களில் சின்னதாக டூர் அடித்தல், மலையேற்றப் பயிற்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள் உள்ளிட்டவற்றுக்கும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றார்.
ஸான்சா இந்தியா நிறுவன மூத்த துணைத் தலைவர் விக்ரம்கராயி கூறுகையில், நடனப் போட்டிகள், பேஷன் ஷோக்கள், இசைப் போட்டிகளை நாங்கள் எங்களது ஊழியர்களுக்காக நடத்துகிறோம். இதன் மூலம் அவர்களின் மனசு லேசாகிறது, கூடுதலாக வேலை பார்க்க புத்துணர்ச்சி கிடைக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications