தேனிலவுக்கு வந்து சிறை சென்ற பாகிஸ்தான் பெண்
ஆக்ரா: தேனிலவுக்காக இந்தியாவுக்கு வந்த இடத்தில், விசா விதி மீறல் புகாரில் சிக்கி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த புதுப் பெண்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஷாபா ஷேஸாதி. சமீபத்தில் இவருக்கும், பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் செட்டிலான ஆரிப் பட் என்பருக்கும் இடையே திருமணம் நடந்தது.
இதையடுத்து இருவரும் தேனிலவுக்காக இந்தியா வந்தனர். இதில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான விசாவை ஆரிப் பட் பெற்றிருந்தார். ஷாபாவுக்கு டெல்லியில் மட்டும் பயணம் செய்யும் விசா வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இருவரும் அதை மீறி ஆக்ராவுக்கு வந்தனர். தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர். உள்ளூர் புலனாய்வுப் பிரிவினர் இருவரின் விசா ஆவணங்களை சோதித்துப் பார்த்தபோது விசா விதிமுறைக்கு மாறாக ஷாபா ஆக்ரா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஷாபாவை கைது செய்து ஆக்ரா நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஷாபா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.