அதிமுகவுக்கு தலைமை நீதிபதி கிடுக்கிப்பிடி!!
சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மாநாடே நடத்தவில்லையா. அரசியல் ரீதியான பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, திமுக இளைஞரணி மாநாட்டுக்கு தனியார் பஸ்களை திருப்பி விடுவதைத்த தடுக்கக் கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தார்.
நெல்லையில் திமுக இளைஞரணி மாநாடு நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டையொட்டி தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களை மிரட்டி நெல்லைக்கு பேருந்துகளை அனுப்ப திமுக முயல்வதாக கூறி, அதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும், திமுக சார்பில் ஆர்.விடுதலையும், அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணியும் ஆஜராகினர்.
அதிமுக வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் தனது கட்சி சார்பிலான வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, உங்களது கட்சி தமிழகத்தில் மாநாடே நடத்தவில்லையா. இந்த விஷயத்தில் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும்.
இது அரசியல் ரீதியான பிரச்சினை. அதை அரசியல் ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது மனோஜ் பாண்டியன் கூறுகையில், மாநாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. தனியார் பேருந்துகளின் வழக்கமான வழித்தடங்களை மாற்றும் முயற்சியைத்தான் எதிர்க்கிறோம் என்றார்.
அதற்கு நீதிபதி ஷா, அப்படி மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பின்னர் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து பெஞ்ச் உத்தரவிட்டது.