சர்வதேச திறனாய்வு போட்டி-ஊட்டி மாணவிகள் சாதனை
ஊட்டி: ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் நடத்திய திறனாய்வு போட்டியில் சாதனை படைத்துள்ளனர் ஊட்டி கிரசன்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள்.
ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், மெக்மில்லன் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய அளவில் பள்ளிகளை கடந்த 2004ம் ஆண்டு முதல் மதிப்பீடு செய்து வருகிறது.
இதற்காக, பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் பாடங்களில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டுக்கான திறனாய்வு போட்டிகளில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை, பாகிஸ்தான், மாலத் தீவுகள், ஐக்கிய அரபு நாடுகள், ஓமான், குவைத், கத்தார், ஈரான் மற்றும் இராக்கிலிருந்து 2,243 பள்ளிகளை சேர்ந்த 1,74527 மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 1,787 மாணவ, மாணவிகள் வென்றுள்ளனர்.
இதில் ஆங்கிலப் பிரிவில் ஊட்டி கிரசன்ட் பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவிகள் நிஹாரிகா அன்னா ஜான் மற்றும் ஆயிஷா ஆஷிகா ஆகியோர் 45 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இவர்களுக்கு கிரசன்ட் பள்ளி முதல்வர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள் பதக்கம் வழங்கி பாராட்டினர்.