எதிரிகள் என்பதா? அன்புமணிக்கு தா.பாண்டியன் கண்டனம்!
சென்னை: மருத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தவர்கள், கிராம மக்களின் எதிரிகள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைச்சர் அன்புமணி பேசியிருப்பது அறிவுப்பூர்வமானதாக இல்லை. மருத்துவ மாணவர்களை கட்டாயப்படுத்தி ஊரக சேவை செய்ய வைத்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என அவர் நினைக்கிறார்.
கிராம மக்களின் பிரச்சினைகளை மருத்துவ வசதிகளால் மட்டும் தீர்த்து விட முடியாது. அவர்களுக்குத் தேவையான பிற விஷயங்களாக மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்றவையும் உள்ளன.
கிராமப்புறங்களுக்கு மருத்துவ சேவை செய்ய அனுபவம் வாய்ந்த டாக்டர்களைத்தான் அனுப்ப வேண்டுமே தவிர மாணவர்களை அனுப்பக் கூடாது.
இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, மற்றவர்களை கிராம மக்களின் எதிரிகள் என அமைச்சர் அன்புமணி விமர்சிப்பது சரியான செயலன்று என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications