பஞ்சாபில் பஸ் மீது ரயில் மோதி 18 பேர் பலி

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இருந்து பெரோஸ்பூருக்கு சட்லெஜ் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் நேற்று காலையில் புறப்பட்டது. மோகா மாவட்டம், அஜித்வால் மற்றும் ஜாக்ரன் ரயில் நிலையங்களுக்கிடையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு ரயில்வே கிராசிங்கில் கேட் மூடப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழியே 30 பயணிகளுடன் மினி பஸ் ஒன்று வந்தது. அந்த பேருந்தில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அவசரமாக செல்ல விரும்பியதால், பேருந்தின் டிரைவர் கேட் கீப்பரை கதவை திறக்கச் சொல்லியதால், கேட் கீப்பரும் கதவை திறந்து விட்டுள்ளார்.
காலை நேரம் அதிக பனி மூட்டம் இருந்ததால், ரயில் வந்தது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மினி பஸ் மீது சட்லெஜ் எக்ஸ்பிரஸ் பலமாக மோதியதில் பேருந்து 20 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது.
பேருந்தில் இருந்த அனைவரும் மரண ஓலம் எழுப்பினர். இந்த விபத்தில் 5 குழந்தைகள், மாணவர்கள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
இந்த விபத்து நடந்தவுடன் அப்பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உதவினர். இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசாரும், ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவசரமாக ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற மினி பஸ் டிரைவர் இக்பால் சிங் , ரயில் வந்ததை பார்த்தவுடன் பேருந்திலிருந்து குதித்து தப்பிவிட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேட் கீப்பர் குல்வீந்தர் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் , பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000- மும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000- மும் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு சார்பில் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவருக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரயில்வேலியில் வேலை அளிக்கப்படும் என்று லாலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications