திமுக இளைஞர் அணி மாநாடு தொடங்கியது - பிரமாண்ட பேரணி
திமுக இளைஞர் அணி ஆரம்பித்து 27 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக மாநில மாநாடு நடத்த அனுமதி கிடைத்தது. நெல்லையில் நடத்த அனுமதி கிடைத்தவுடன் உற்சாகமாக மாநாட்டுப் பணிகளைத் தொடங்கியது இளைஞர் அணி.
உள்ளாட்சித் துறை அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் மாநாட்டுக்கான பணிகள் தொடங்கின.
மாநாட்டையொட்டி நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டது. அலங்காரத் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், பேனர்கள், கட் அவுட்கள், பிரமாண்ட பந்தல், பிரமாண்ட மேடை என தடபுடலாக நடந்து வந்த ஏற்பாடுகள் நிறைவுற்ற நிலையில் இன்று காலை மாநாடு கோலாகலமாக தொடங்கியது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நெல்லையில் குவிந்துள்ளனர். இதற்காக தனியார் பேருந்துகள், வேன்கள், கார்கள் என பல வகை வாகனங்களிலும் நெல்லைக்கு அவர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான தனியார் பேருந்துகளில் திமுகவினர் நெல்லை வந்துள்ளனர்.
நெல்லை வந்தார் கருணாநிதி:
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று இரவு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லைக்குப் புறப்பட்டார். இன்று காலை அவர் நெல்லை வந்து சேர்ந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான திமுகவினர் ரயில் நிலையத்திற்கு வந்து கருணாநிதியை வரவேற்றனர். குதிரைப்படை வரவேற்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மாநில மாநாடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டுத் திடலில் தொடங்கியது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கொடியேற்றினார். இள.புகழேந்தி மாநாட்டைத் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் மொழிப்போர் தியாகிகளின் படங்களை அசன் முகம்மது ஜின்னா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாடு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் ஜீப்பில் சென்றபடி மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பிரமாண்ட பேரணி:
பிற்பகல் 2.35 மணிக்கு பிரமாண்ட பேரணி தொடங்கியது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலிருந்து இந்தப் பேரணி தொடங்கியது.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அ.ராசா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின் டிப் டாப் உடை அணிந்து, சிவப்பு நிற டையுடன் மிடுக்கான வெள்ளை நிற சீருடையில், பேரணிக்குத் தலைமை தாங்கி திறந்த ஜீப்பில் சென்றார்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன் செல்ல, பின்னால் குதிரைகள் தொடர, ராணுவ மிடுக்குடன் தொண்டர் படையினர் அணிவகுத்துச் சென்றனர். அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களைச் ேசர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மாவட்ட வாரியாக அணிவகுத்துச் சென்றனர்.
பெரியார் சிலை, சேவியர் கல்லூரி, பிஷப் இல்லம், கலெக்டர் பங்களா வழியாக மகாராஜா ரவுண்டா அருகே வந்தபோது அங்கு திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்தபடி முதல்வர் கருணாநிதி பேரணியைப் பார்வையிட்டார்.
அவருடன் அமைச்சர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் அமர்ந்து பேரணியைப் பார்வையிட்டனர். மத்திய, மாநில அமைச்சர்களும், திமுக பிரமுகர்களும் பேரணியைப் பார்வையிட்டனர்.
அணிவகுப்பின் நிறைவில் மாநாட்டுத் திடலில் உள்ள பூண்டி கலைச்செல்வன் அரங்கில் காவியக் கலைஞர் 84 என்ற ஒலி- ஒளிக் காவியம் நடைபெறுகிறது.
கருணாநிதியின் சிறு வயது முதல் இப்போதுள்ளது வரையிலான வாழ்க்கைச் சித்திரம், ஒலி - ஒளிக் காட்சியாக நடத்திக் காட்டப்படும்.
தி.க. தலைவர் கி.வீரமணி இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். கவிஞர் வைரமுத்து முன்னிலை வகிக்கிறார். இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
'நெட்'டில் நேரடி ஒளிபரப்பு:
இளைஞர் அணி மாநாட்டை உலகெங்கும் உள்ளவர்கள் நேரில் காணும் வகையில் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி செய்துள்ளார்.
அந்த இணையதளத்தின் முகவரி:
பலத்த பாதுகாப்பு:
மாநாட்டையொட்டி நெல்லை முழுவதும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு வளாகத்திலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்தம்பித்த சென்னை - திருச்சி நெடுஞ்சாலை:
திமுக இளைஞர் அணி மாநாட்டுக்க்காக சென்ற ஆயிரக்கணக்கான வாகனங்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, திருச்சி,
மதுரை வழியாக நெல்லை நோக்கி சென்ற வண்ணம் உள்ளன.
உளுந்தூர்பேட்டையில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சென்னையிலிருந்து இரவு நேரத்தில் புறப்படும் ரயில்கள் கடப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை அணிவகுத்து சாரை சாரையாக நின்றன.
எப்போதும் இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நிற்பது வழக்கம். திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு திமுக தொண்டர்கள் சாரை சாரையாக வாகனங்களில் சென்றதால் கிட்டத்திட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நள்ளிரவு ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் பயணிகள் கடும் குளிரில் தவித்தனர். நான்கு வழிப் பாதை பணிகள் நடைபெற்று வருவதாலும் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன.













Click it and Unblock the Notifications