ஆசிரியைக்கு டார்ச்சர் கொடுத்த மனித உரிமை கழக செயலர் கைது
சென்னை:பள்ளிக்கு சென்ற ஆசிரியையை பின் தொடர்ந்து சென்று தொல்லை செய்த மனித உரிமை கழக செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம், சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் வைதேகி. 24 வயதாகும் இவர் மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மீது தாம்பரத்தை சேர்ந்த ராஜ் (47) என்பவருக்கு ஆசை பிறந்தது. இந்த ராஜ் ஏற்கனவே கல்யாணமானவர். ஒரு மகனும் உள்ளார்.
வைதேகியை விட பல மடங்கு வயதான ராஜ், தினசரி அவரைப் பின் தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்துள்ளார்.
இந்த நிலையில் வைதேகி வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த தகவல் ராஜுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு வைதேகியைப் பற்றி அவதூறாக கடிதம் எழுதினார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த வைதேகி தனது அண்ணி ஆஷாவிடம் கூறி அழுதார். இதையடுத்து ஆஷா, ராஜிடம் போய் கோபமாக பேசினார். அப்போது கோபமடைந்த ராஜ், ஆஷாவை நடு ரோட்டில் வைத்து பலர் முன்னிலையில் கன்னத்தில் அடித்துள்ளார்.
இதையடுத்து ஆஷா ராஜ் மீது போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் ராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.