அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 2 இந்திய மாணவர்கள் சுட்டுக் கொலை
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி, கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார்.
இவர்கள் இருவரும் லூசியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக தங்கிப் படித்து வருகின்றனர். இருவரும் திருமணமானவர்கள். எனவே இவர்களுக்கு திருமணமான மாணவர்களுக்கான இருப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு சந்திரசேகர் ரெட்டி தங்கியிருந்த அறைக்கு கிரண்குமார் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பயந்து போன அவரது கர்ப்பிணி மனைவி சந்திரசேகர் ரெட்டியின் அறைக்குச் சென்றார்.
அங்கு கிரண்குமாரும், சந்திரசேகர் ரெட்டியும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார். இருவரும் கட்டப்பட்டு, நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை யார் கொன்றனர், எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் திட்டமிட்டப் படுகொலை என்பது தெரிய வந்துள்ளது. அனேகமாக கொள்ளையர்களின் கைவரிசையாக இது இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத 3 பேர் சென்றதாக சிலர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.