திமுக 'வெள்ளம்' - மக்கள் அவதி!
திருநெல்வேலி: நெல்லையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான திமுகவினரால் நகரின் பெரும் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
நெல்லையில் நேற்று தொடங்கிய திமுக இளைஞர் அணி மாநாட்டையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் நெல்லையில் குவிந்துள்ளனர்.
பேரணியில் மட்டும் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேரணியின்போது முருங்காக்குறிச்சி சிக்னல் முதல் நெல்லை ரயில் சந்திப்பு வரையிலான பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சில இடங்களில் திமுகவினர் சாலையில் செல்ல முயன்ற இருசக்கர வாகனங்களை அடித்து தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் கூட வந்த மற்ற திமுகவினர், தகராறில் ஈடுபட்ட திமுகவினரை அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
பெரும் திரளான தனியார் பேருந்துகள் தவிர ஏராளமான அரசுப் பேருந்துகளிலும் திமுகவினர் வந்திருந்ததைக் காண முடிந்தது. பேருந்துகளின் உள்ளேயும், மேலேயும் பெரும் திரளான திமுகவினர் அமர்ந்து வந்தனர்.
பேரணி வரும் பாதையில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்களும் மதியத்திற்கு மேல் மூடப்பட்டு விட்டன. அந்தப் பாதையில் உள்ள பல ஹோட்டல்களும் கூட வேகம் வேகமாக மூடப்பட்டு விட்டன.
மாநாடு மற்றும் பேரணியால் நெல்லை நகரில் திருவிழா உற்சாகம் காணப்பட்டாலும், பலர் அவஸ்தைப்பட்டதையும் காண முடிந்தது. வெளியூர்களிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நெல்லைக்கு வந்த பலரால் நகருக்குள்ளேயே நுழைய முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் பெரும் அதிருப்தியும், அவஸ்தையும் அடைந்தனர்.
கருணாநிதிக்கு கருப்புக் கொடி - 4 பேர் கைது
முன்னதாக நெல்லைக்கு வரும் முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனால் போலீஸார் முக்கிய இடங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications