'புரட்சி' தலைவர், தலைவியைப் புறக்கணியுங்கள் - கவிஞர் தமிழச்சி

முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகளும், தற்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டின் நெல்லை மாநாட்டின் மூலம் திமுகவில் அடியெடுத்து வைத்துள்ளார்.
நேற்று தொடங்கிய இளைஞர் அணி மாநாட்டில் இவர்தான் கொடியேற்றி வைத்தார். இன்று அவர் மாநாட்டில் பேசுகையில், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் தளராமல் எவருக்கும் அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்ற அண்ணாவின் கூற்றுப்படி அக்கணம் மூடிய இக்கணம் வரை தமிழர்களின் நலனுக்காக இமை தூங்காது வாழ்ந்துவரும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் கருணாநிதி தான்.
மக்களிடம் இருந்த மூட பழக்க வழக்கங்களை ஒழித்து அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும், வழங்கிய தமிழின தலைவர் கருணாநிதி ஒரு வன்புரட்சியே செய்துள்ளார். அதனால் தான் தமிழகமே இமைக்க மறந்து எழுச்சிமிக்க இந்த மாநாட்டை நோக்குகிறது.
இதே நெல்லையில்தான் மதுரை, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களின் சார்பில் 1917ம் ஆண்டு நீதிக்கட்சி மாநாடு நடந்தது. அதில் இலவச தொடக்கக் கல்வி, அந்த கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26,27ம் தேதிகளில் கோவில்பட்டியில் தலைவர் கருணாநிதி தலைமையில் நெல்லை மாவட்ட கழக மாநாடு நடந்தது. இன்றுவரை பகுத்தறிவு சுதந்திரம், தனிநபர் மாற்றம், சமூக மேம்பாடு ஆகியவற்றை கடந்து வந்துள்ளது. போராட்டங்கள்
நிறைந்த இயக்கமாகவும் திமுக வளர்ந்துள்ளது.
நம்முடைய காலத்தின் கோட்பாடுகளில் ஆழமான வேராய் இருக்கும் திராவிடத்தின் தத்துவமும், நம் இனம், மொழி, பாகுபாடு போன்ற ஆழமான புரிதலுடன் இந்த நூற்றாண்டின் நவீன வளர்ச்சியை சுவைத்து பயன்பெறும் பக்குவத்தை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்துவதே நம் முன் இருக்கின்ற பெரிய சவாலாகும்.
இன்று படித்த மேல்தட்டு இளைஞர் வர்க்கத்தினர் பலர் அரசியல் தேவையற்றது என்று கூறுவதும், கிராமத்து இளைஞர்களிடத்தில் அரசியல் ஆர்வத்தால் என்ன பயனென்று வெறுமை கலந்த கோபத்தையும் அதிகம் பார்க்க முடிகிறது.
அப்பேற்பட்டவர்களே நம்பிக்கை தரும் மூலப்பொருட்கள் ஆவார்கள். அவர்களுக்கு எந்த அரசியல் கட்சி தமிழர்களின் உரிமைகளுக்காக ரத்தம் சிந்தி உழைத்துள்ளது. எந்த அரசியல் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றியுள்ளது என்பதை திமுகவினர் தெளிவுபடுத்தி விளக்கி கூற வேண்டும்.
தமிழக அரசியலில் இன்று திடீர் கட்சிகள் ஏராளமாக உருவெடுத்துள்ளன. அவ்வாறு தோன்றும் கட்சிகளுக்கு மின்மினி தலைவர்கள் பலர் உருவாகுகின்றனர்.
தமிழக இளைஞர்கள் பகுத்தறிவு என்னும் தராசு தட்டாலும் திராவிட உணர்வு என்ற எடைக்கற்களையும் கொண்டு சீர்தூக்கி பார்த்து திடீர் கட்சிகளையும், மின்மினி தலைவர்களையும் ஒதுக்கி புறந்தள்ளுங்கள். புரட்சி என்ற அடைமொழியில் இயங்குகின்ற தலைவர்களையும்,
தலைவிகளையும் புறக்கணியுங்கள்.
மேம்போக்கான கேளிக்கையான நிலையில் தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். வெறும் தனி மனித உணர்வு மட்டுமல்ல. சமூக முன்னேற்ற உணர்வுடன் செயல்படுங்கள். தன்னால் மற்ற பல தியாகங்களை
தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் செய்திருக்கின்ற சமுதாய இயக்கமான திமுகவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார் அவர்.
தனது முதல் கட்சிப் பேச்சிலேயே ஜெயலலிதாவையும், விஜயகாந்த்தையும் தாக்கிப் பேசி திமுகவினரின் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார் தமிழச்சி.












Click it and Unblock the Notifications