அவசரநிலையை திரும்பப் பெற்றார் முஷாரப்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் தொடர் நெருக்கடியைத் தொடர்ந்து அவசர நிலையை திரும்பப் பெற்றார் அதிபர் முஷாரப். மேலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்து வந்த நிலையில் நவம்பர் 3ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் அதிபர் முஷாரப். மேலும் அரசியலமைப்புச் சட்டமும் முடக்கி வைக்கப்பட்டது.
நீதிபதிகள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் என பலரும் சரமாரியாக கைது செய்யப்பட்டனர். முஷாரப்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காமன்வெல்த் அமைப்பும், பாகிஸ்தானை தனது கூட்டமைப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.
முஷாரப் ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக வேண்டும், அவசர நிலையை ரத்து செய்ய வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகினார் முஷாரப். இதைத் தொடர்ந்து நேற்று அவசர நிலையை விலக்கி உத்தரவிட்டார். அரசிலமைப்புச் சட்டமும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜனவரி 8ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications