கிராமங்களில் மருத்துவ வசதி இல்லை-பாமக
சென்னை: தமிழகத்தில் பல கிராமங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவேயில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ வசதியில்லாத கிராமங்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இன்று சென்னையில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் ஏழைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை. நமது மாநிலத்தில் மொத்த அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 9,349 மட்டுமே. இதன்படி பார்த்தால் நமது மாநிலத்தில் 6,500 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலை உள்ளது.
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முறைப்படி செயல்படவில்லை. பல கிராமங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
இதை கருத்தில் கொண்டு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் வேண்டும். ஏழைகளும் இதய சிகிச்சை உடனடியாக பெறும் வசதி வேண்டும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும் என்றார் ஜி.கே.மணி.