நெல்லை திமுக மாநாட்டுக்காக கிராமங்களுக்கு மின்வெட்டு - வைகோ
சென்னை: நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கிராமப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மின்தடை, உரத்தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ. 1,000 வழங்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதிமுக சார்பில் வைகோ தலைமையில் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் வைகோ கூறியதாவது,
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். நெல்லை திமுக மாநாட்டுக்கு தடை இல்லாத மின்சாரம் கிடைப்பதற்காக கிராமப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல. கடுமையான உரத் தட்டுப்பாடு காரணமாக ஏழை விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000ஆக உயர்த்தாவிட்டால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாவார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக குவிண்டால் 1க்கு ரூ.1,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஆற்காடு வீராசாமியும், டாக்டர் ராமதாசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். மத்திய, மாநில அரசியலில் விரைவில் மாற்றம் வரும் என்றார் வைகோ.