மலேசியாவில் கால் பதிக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகங்கள்

கோலாலம்பூர்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் மலேசியாவில் புதிய சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை அமைக்கவுள்ளன.
மலேசியாவின் 2வது பெரிய மாகாணமான பெராக் மாகாணத்தில் ரூ. 5400 மில்லியன் மதிப்பில் இந்த பிரமாண்ட பல்கலைக்கழகம் உருவாகிறது.
இந்த புதிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி, நர்சிங், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாஜலி, ஜியோ சயின்ஸ், நிர்வாகவியல் படிப்புகள் சொல்லிக் கொடுக்கப்படும்.
குவா டெம்புராங் என்ற நகரில் அமையவுள்ள இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தை பிளேர் கல்வி சேவை நிறுவனம் அமைக்கிறது. இந்த கூட்டு முயற்சியில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கழகம், கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள கே.எல்.இ. பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகின்றன.
மான்சரோவர் குழும நிறுவனத்தின் ஒரு உப நிறுவனம்தான் பிளேர் கல்வி சேவை நிறுவனம். இந்த நிறுவனம் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளையும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும் நிறுவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்னை வந்த பெராக் மாகாண முதல்வர் டஜோல் ரோஸ்லி கஸாலி இதுகுறித்த விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தத் திட்டத்திற்காக பெராக் மாகாண அரசு 100 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. கட்டுமானப் பணிகள் 2009ம் ஆண்டு நிறைவடையும் என்றார்.
மேலும், கஸாலியின் வருகையின்போது இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்புக்கும், பிளேர் கல்வி சேவை நிறுவனத்திற்கும் இடையே, இந்த புதிய சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
புதிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் வி.ஜி.குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications