காவிரி ஆற்றில் நிர்வாண நிலையில் 2 உடல்கள் மீட்பு
நாமக்கல்: குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த 2 வாலிபர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் இரு வாலிபர்களின் உடல் கிடந்தன. அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து உடனே டிஐஜி செண்பகராமன் தலைமையில் போலீசார் அங்கு மோப்ப நாயுடன் வந்தனர். இரு வாலிபர்களின் உடல்களிலும் ரத்தக் காயங்கள் இருந்தன. இருவரது கைகளும் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் மிதந்து கொண்டிருந்தன.
வாலிபர்கள் உடல்களை மீட்ட போலீசார் அங்கு கிடந்த செல்போன், வாட்ச் ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட மொபைல் போன் மூலம் அவர்கள் யார் யாரிடம் பேசினார்கள் என்று போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
விசாரணையில் இறந்த இருவரில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சந்திரப்பா(35) என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவரை பற்றி இதுவரை அடையாளம் தெரியவில்லை.
முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதால் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவர் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பகுதி இரவு நேரங்களில் கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.