31 தமிழர்கள் விடுதலை: படாவிக்கு பாராட்டு

கோலாலம்பூர் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 31 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கும், சட்டவிரோதமாக கூடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 5 பேர் மாணவர்கள் ஆவர்.
இந்த வழக்குகளை கைவிட வேண்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான டத்தோ சாமிவேலு, பல்வேறு தமிழர் அமைப்புகள் பிரதமர் படாவியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதேசமயம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு நெருக்கடிகளும் அதிகரித்து வந்தன.
இந்த நிலையில், 31 தமிழர்கள் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டை வாபஸ் பெற பிரதமர் படாவி உத்தரவிட்டார். மேலும் ஐந்து மாணவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் திரும்பப் பெறவும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் 31 பேர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டும், 5 மாணவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும் 5 மாணவர்கள் தவிர மற்ற 26 பேர் மீதும் சட்டவிரோதமாக கூடியதாக குற்றச்சாட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. இதைத் தொடர்ந்து 31 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். 26 பேர் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
படாவியின் இந்த நடவடிக்கைக்கு தமிழர் அமைப்புகள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அமைச்சர் டத்தோ சாமிவேலு கூறுகையில், படாவி அரசின் நடவடிக்கை என்னை நெகிழ வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் கொலை முயற்சி வழக்கைத் திரும்பப் பெறச் செய்ததற்காக நாங்கள் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
பிரதமரின் நடவடிக்கையை மலேசிய இந்திய காங்கிரஸ் முழுமையாக வரவேற்கிறது, பாராட்டுகிறது என்றார்.
மலேசிய இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் பிரதீப் குமார் குக்ரேஜா கூறுகையில், இந்திய வர்த்தகத் துறையினர் இந்த நடவடிக்கையால் பெரும் மகிழச்சி அடைந்துள்ளனர் என்றார்.
மலேசிய இந்து இளைஞர் கவுன்சில் தலைவர் ராசசெல்வன் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள், இளைஞர்கள். அவர்களை விடுவித்தது பாராட்டுக்குரியது.
இதேபோல, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களையும் விடுவிக்க அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும். அல்லது அவர்கள் மீதான வழக்கு நியாயமான முறையில் நடக்க பிரதமர்நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.
மலேசிய தமிழ் இளைஞர் கிளப் தலைவர் பொன்னையா பெரம்பன் கூறுகையில், பிரதமர் படாவியை நாங்கள் சந்தித்து கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களது சந்திப்பின் விளைவாகவே இது நடந்துள்ளது.
இதேபோல இந்தியர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் எதிர்காலத்தில் சுமூக தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம் என்றார்.
31 தமிழர்களை விடுவித்தது போல உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயக்குமார், கங்காதரன், மனோகரன், கணபதிராவ், வசந்தகுமார் ஆகியோரும் விடுவிக்கப்பட வேண்டும் என மலேசிய தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications