தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயவு வேண்டும்: வசந்தகுமார்
தேனி: காங்கிரஸ் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் அமைக்க திமுக இளைஞர் அணி மாநாட்டில் வலியுறுத்தியது வரவேற்கத்தக்கது. அதற்காக மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியுள்ளேன்.
திமுக கூட்டணியில் இருந்துகொண்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசை விமர்சனம் செய்வது தேவையற்றது. இதனால் மக்கள் தான் குழப்பம் அடைவார்கள்.
காங்கிரஸ் தயவின்றி தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் காலத்தில் அதிமுக தவிர எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்.
சேது சமுத்திர திட்டம் ஒரு நல்ல திட்டம். அதன் மூலம் தமிழக மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பது வருந்தத்தக்கது.
தமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதிகளை முளையிலே கிள்ளி எறியவேண்டும் என்றார் வசந்தகுமார்.