இரட்டை கொலை: 3 பேருக்கு 4 ஆயுள் - 6 பேருக்கு இரட்டை ஆயுள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனைகளும், 6 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கே.கருங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் சித்ராதேவி என்பவரும், சரஸ்வதி என்பவரும் போட்டியிட்டனர். இதில் சித்ராதேவிக்கு ஆதரவாக தர்மராஜ், பால்ச்சாமி, வடிவேலு ஆகியோர் பணியாற்றினர்.
தேர்தலில் சித்ரா தேவி வெற்றி பெற்று தலைவர் ஆனார். இதனால் சரஸ்வதியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். தங்களது வேட்பாளர் தோற்றதற்குக் காரணமாக இருந்தவர்களைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.
இதையடுத்து கருங்குளத்தை சேர்ந்த குருசாமி (30), கருப்பசாமி (33), வேலு (52), முருகேசன் (33), இன்னொரு கருப்பசாமி (40), சாமுவேல் (30), சண்முகம் (32), பாண்டி (27) மற்றும் கருப்பையா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இரவு சித்ராதேவியின் தந்தை தர்மராஜ், அவருடைய தந்தை கருப்பையா மற்றும் உடன் இருந்த பால்ச்சாமியை ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டினர்.
இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தர்மராஜும், கருப்பையாவும் உயிரிழந்தனர். பால்ச்சாமி உயிர் பிழைத்தார்.
இதுதொடர்பாக 9 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ரபீக் தீர்ப்பளித்தார்.
குருசாமி, முருகேசன், பாண்டி ஆகியோருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். மேலும் குருசாமிக்கு ரூ.4,000 அபராதம், முருகேசனுக்கு மேலும் 3 ஆண்டு தண்டனை, ரூ.5,000 அபராதமும், பாண்டிக்கு மேலும் 2 ஆண்டு தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சாமுவேல், கருப்பையா, கருப்பசாமி, இன்னொரு கருப்பசாமி, வேலு, சண்முகம் ஆகிய 6 பேருக்கும் தலா இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 6 பேருக்கும் தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
9 கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டதால், ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications