வருசநாட்டில் போலீஸ்-நக்சல்கள் துப்பாக்கிச் சண்டை - 5 பேர் சிக்கினர்
தேனி:தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு வனப்பகுதியில் இன்று காலை நக்சலைட்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 நக்சலைட்டுகளை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
தர்மபுரி மாவட்ட வனப்பகுதிகளையும், பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும் தங்களது கோட்டைகளாக மாற்ற நக்சலைட்டுகள் நீண்ட காலமாக முயற்சித்து வந்தனர். ஆனால் அது பலிக்கவில்லை. தமிழக போலீஸாரின் கிடுக்கிப்பிடியான நடவடிக்கை காரணமாக நக்சலைட்டுகளால் தமிழகத்தில் காலூன்றவே முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர்கள் தேனி மாவட்ட வனப்பகுதியை தங்களது களமாக தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அடர்த்தியான வனப் பகுதிகளில் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியும் ஒன்று.
கடந்த ஆண்டு இங்குள்ள முருகமலை வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இதில் முக்கிய நக்சலைட் சிலர் சிக்கினர். இதன் பின்னரே தேனி மாவட்ட வனப்பகுதியை நக்சலைட்டுகள் குறி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இப்பகுதிகளில் உள்ள நக்சலைட்டுகளை ஒழிக்க கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தலைமையில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது,
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட அதிரடிப்படையினர் இங்கு குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
சமீபத்தில் வருசநாடு வனப்பகுதியில் 3 நக்சலைட்டுகளை போலீஸார் பிடித்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை வருசநாடு பகுதியில் போலீஸாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருசநாடு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மேல்பூசனூர் கிராமத்தில் உள்ள ராமர் என்பவரது கரும்புத் தோட்டத்திற்குள் நக்சலைட்டுகள் ஐந்து பேர் புகுந்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். தோட்டத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது உள்ளே பதுங்கியிருந்த நக்சலைட்டுள், போலீஸாரை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.
இதை எதிர்பாராத போலீஸார், சுதாரித்துக் கொண்டு திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3 நக்சலைட்டுகள் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவனது பெயர் மகாலிங்கம். இவன்தான் இந்தக் குழுவின் தலைவன் ஆவான். 2 பேர் துப்பாக்கிகளை போட்டு விட்டு சரணடைந்தனர்.
இதையடுத்து ஐந்து பேரையும் போலீஸார் கைது செய்தனர். காயமடைந்த 3 நக்சலைட்டுகளும் தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். கைதான 2 பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடமிருந்து துப்பாக்கிளும், பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
துப்பாக்கிச் சண்டையில் 2 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.