வாக்காளர் பட்டியல்: மாணவர்களை ஊக்குவிக்கும் தேர்தல் ஆணையம்
மதுரை: வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்யுமாறு தமிழக கல்லூரி மாணவர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா கூறியதாவது,
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த சோதனை முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளின் மாணவ-மாணவிகளிடமிருந்து இதுவரை 6,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் செய்வது, பெயர்களை எடுப்பது என இதுவரை 14.5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர் பதிவு செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். முழுவதும் ஒழுங்குபடுத்திய பிறகு இறுதி கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.