ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்கள் உற்சாகம்
திருச்சி: பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு ரங்கனை வணங்கினர்.
வைணவத் திருத்தலங்களில் நடைபெறும் முதன்மையான விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி விழா இன்று கோலாகலமாக நடந்தது. 108 வைவணத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் தலமும் ஆன ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு ரங்கநாதப் பெருமான், ரத்தின அங்கி அலங்காரத்துடன் மூலஸ்தானத்திலிருந்து வலம் வந்தார். பின்னர் காலை 5 மணியளவில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாக அவர் பிரவேசித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி மேலிட, ரங்கா, ரங்கா என கோஷமிட்டு வணங்கினர்.
பின்னர் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்கு ரங்கப் பெருமான் அருள் பாலித்தார். பக்தர்களுக்காக பரமபத வாசல் 10 நாட்களுக்குத் திறந்திருக்கும்.
இதேபோல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு வைவணத் திருக்கோவில்களிலும் இன்று சொர்க்க வாசல் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடந்தேறியது.












Click it and Unblock the Notifications