யுஎஸ்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 இந்தியர்களின் உடல்கள் ஹைதராபாத் வருகை
வாஷிங்டன்: அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 2 இந்திய மாணவர்களின் உடல்கள் இன்று விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்படுகின்றன.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி கொம்மா(31) மற்றும் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார் அல்லாம் (33) ஆகிய இருவரும் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக தங்கிப் படித்து வந்தனர்.
திருமணமான இவர்கள் இருவரும் தங்கியிருந்த எட்வர்ட் கே குடியிருப்பு வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை (13ம் தேதி) இரவு நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தனர்.
இறந்த மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப இந்திய தூதரகம் ஏற்பாடுகளை செய்தது. மாணவர்களின் உடல்களுடன் அவர்களின் குடும்பத்தார் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு விட்டனர். இன்று உடல்கள் ஹைதராபாத் வந்து சேரும்.
இறந்த மாணவர்களுக்கு லூசியானா பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.